Sunday, May 27, 2012

இஷ்டம்
ஆயிரம் காலத்து பயிரான திருமண பந்தத்தை ஏதோ ஆட்டுப் புழுக்கையை போல டீல் பண்ணுகிற ஐ.டி ஜோடிகளின் அவஸ்தைதான் இஷ்டம். ஏற்கனவே வைரஸ் ஃபார்ம் ஆன சிஸ்டம் போல நாலாப்புறத்திலிருந்தும் 'கலாச்சார கேடர்கள்' என்ற நற்பெயரை வாங்கியிருக்கும் இவர்களின் கழுத்தில்தான் இப்படியொரு தங்கப்பதக்கத்தை(?) மாட்டி கவுரவித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் பிரேம் நிஸார். நூல் பிசகியிருந்தாலும் நம்மை பிசக்கிவிடுவார்கள் என்ற எச்சரிக்கையும் தென்படுகிறது அவரது முடிவில். தப்பித்தார் தம்பிரான்!
சந்தானம் என்கிற பூசாரி இருக்கிற வரை, குறி கேட்க வரும் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சம் ஏது? இவரை நம்பியே நகர ஆரம்பிக்கும் படம், ஒரு கட்டத்தில் இவர் இல்லாமலே விறுவிறுப்படைந்ததுதான் ஆச்சர்யம். சரி, கதைக்கு வருவோம்.
லவ் மேரேஜ் ஆகி சில நாட்களுக்குள்ளாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் விமல்- நிஷா அகர்வால் ஜோடி, முறையே ஆளுக்கொரு துணையை தேர்ந்தெடுக்கிறது. தங்கள் பழைய வாழ்க்கையில் ஈ புகுந்த சமாச்சாரத்தை கூட தனது துணையிடம் விடாமல் சொல்லி திறந்த புத்தகமாகிறார்கள் இருவரும். இந்த செகண்ட் ஹேன்ட் டீல் நால்வருக்குமே பிடிக்க, கல்யாணத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். ரிஜிஸ்தர் ஆபிசில் மறுபடியும் கல்யாணத்திற்காக கூடும் ஜோடிகள் தங்கள் முதல் காதலை மறந்தார்களா, இரண்டாம் திருமணத்தை ஏற்றார்களா என்பதே முழுக்கதை.
மனசுக்குள் ஒட்டிக்கொண்ட களவாணி விமல், இந்த படத்தில் ஐ.டி இளைஞனாக வருகிறார். மீசையில்லாத அவரது முகமும், ததிங்கணத்தோம் போடும் அவரது இங்கிலீஷும், பொசுக்கென்றால் வெளிநாட்டில் ஆடுகிற டூயட்டும் யானையின் அம்பாரியை குதிரைக்கு கட்டிய மாதிரி பொருந்தவே இல்லைதான். இருந்தாலும் அடுத்த கட்ட வளர்ச்சி தேவைப்படுகிறதே அவருக்கு? விமல்-நிஷா காதலில் அப்படியொரு லைவ்! முதல் முத்தத்திற்கு பிறகு தொடரும் அவர்களது 'ப்ரி செக்ஸ்' தைரியமும் அந்த சூழலும் இக்கால இளசுகளுக்கு எச்சரிக்கையா, ஐடியாவா? எதுவாகவும் இருந்து தொலையட்டும்... ஜில்லுன்னுதான் இருக்கு!
புதுமுக வரவுகளில் அண்மைக்கால அசத்தல் இந்த நிஷா. காட்டு காட்டென்று 'காட்டுகிற' விஷயத்தில் நடிப்பும் உள்ளடங்கியிருக்கிறதேய்யா... சபாஷ்.
சந்தானத்திற்கு இப்படியொரு ஸ்திரீ லோலன் அறிமுகமா? அதை படம் முழுக்க கண்ட்டினியூ பண்ணாமல் விட்டுட்டீங்களே டைரக்டர். மற்றபடி கண் போன பிறகு கலர் டிவி வாங்கி என்ன பிரயோஜனம் என்கிற சந்தானத்தின் வழக்கமான அலம்பலுக்கு தியேட்டரே 'ஆஹா'வாகிறது.
விமலின் அம்மாவாக நடித்திருக்கிற பிரணதியும் அவரது சொந்தக்குரலும் அவர் பேசும் 'பொளேர்' வசனங்களும் சற்று நிமர்ந்து அமர வைக்கிறது ரசிகர்களை. அழுத்தமான இந்த அட்வைஸ்கள் திக்குத் தெரியாத இளசுகளை பக்குவாக்கும்!
இப்படத்தின் ஆகப்பெரிய நிம்மதி, வலிய திணிக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் இல்லை. அவ்வளவு ஏன், சண்டை காட்சியே இல்லை.
இப்படத்தின் மேன் ஆஃப் த மேட்ச், தமன் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
இஷ்டம்- விமலுக்கு துரதிருஷ்டம், நிஷா அகர்வாலுக்கு அதிர்ஷ்டம்!
-ஆர்.எஸ்.அந்தணன்

No comments:

Post a Comment